ஆஸ்கர் விருது 2018-ம் ஆண்டுக்கான போட்டியில், மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'புலி முருகன்' படத்தில் இருந்து, ஜேசுதாஸ் - சித்ரா பாடிய 'காலனையும் கால்சிலம்பே' மற்றும் வாணி ஜெயராம் பாடிய 'மானத்தே மாடக்குரும்பே' ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பிடித்துள்ளன.
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பாடல்கள் பிரிவில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே படம் 'புலி முருகன்' மட்டும் தான். இந்தப்படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் கோபிசுந்தரின் அதிரவைக்கும் பின்னணி இசையும் பாடல்களும் முக்கிய பங்கு வகித்தன. இந்தப்படத்திற்கான பாடல்களையும், பின்னணி இசையையும் கோபிசுந்தரும், 'புலி முருகன்' இயக்குனர் வைசாக்கும் சுமார் ஒருமாத காலம் சென்னையில் தங்கி உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட பாலிவுட் படமான 'நியூட்டன்' இறுதிச் சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் பிரிவிலாவது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதைத் தட்டிவிட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.