கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 4 கடைகளில் மட்டும் சுமார் 15,000 ரூபாய் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.....
கோவை திருச்சி சாலை ஒண்டிபுதூர் மேம்பாலத்திற்கு அடிப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை மையம், இருசக்கர வாகன பணிமனை, டாஸ்மாக்,மளிகை கடை,மின்னணு சாதனங்கள் விற்பனை மையம் என பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கே இருக்கக்கூடிய மளிகை கடை ஒன்றில் நுழைந்த நபர்கள் அங்கிருந்த மளிகை பொருட்களை சிதறடித்ததுடன் கடையிலிருந்து நான்காயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.இதேபோல் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை அதிலிருந்து 5 ஆயிரம் ரூபாயும் பெட்டிக் கடை ஒன்றை உடைத்து 2,000 ரூபாயும் மேலும் ஒரு கடையில் மூன்றாயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபானக் கடையில் இரண்டு பூட்டுகளை உடைத்து அவர்கள் கொள்ளையில் ஈடுபட முற்பட்ட நிலையில் மையப் பகுதியில் இருக்கக்கூடிய பூட்டை உடைக்க முடியாததால் கடப்பாரையை கொண்டு நெம்பி பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.இதையடுத்து இன்று காலை அவ்வழியே சென்ற சிலர் அடுத்தடுத்து கடைகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் விரைந்து சென்ற சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு பின்னர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இப்பகுதியில் கடந்த வாரம் வொர்க்ஷாப் தொழிலாளி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.அடுத்தடுத்து நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்....
More than ten store robberies