தருமபுரி: தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 8000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 700 கன அடியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து, நேற்று (மே 19) 5 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று (மே 20) மேலும் அதிகரித்து, காலை 8 மணி நிலவரப்படி 8000 கன அடியாக உள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மெயின் அருவி, சினி அருவியில் உள்ளிட்டவற்றில் குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து, பரிசல் பயணம் செய்தும் கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.