கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே திரௌபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள, எருமைப்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது 25 ஆம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 21 ஆம் தேதி, குண்டம் திறக்குதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இந்த நிலையில், நேற்று (மே 20) காலை, கங்கையில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், இரவு தேர் இழுத்தல் மற்றும் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்காக, கோயில் முன்பாக 61 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், விரதம் இருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தியுடன் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தொடர்ந்து அன்னதானமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், வனத்துறையினர், எருமைப்பாறை, டாப்சிலிப், கோழிக்கமுத்தி, கூமாட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து, வனச்சரகர் சுந்தரவேல் கூறுகையில். “வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், எருமப்பாறை மலைவாழ் மக்களின், திரௌபதி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதனை, டாப்சிலிப் வந்த சுற்றுலா பயணிகள் திருவிழாவை கண்டு களித்தனர்” என்றார்.