ஈரோடு: கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கரூர் என மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. அதில் ஈரோட்டில் உள்ள ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்து வந்தது.
இந்த மலைக் கிராமங்களில் உள்ள மக்கள் அன்றாட பயணங்களுக்கு அரசுப் பேருந்தையே நம்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சத்தியமங்கலம் புறப்பட்டது. அந்த பேருந்து ஆசனூர் அருகே சென்றபோது பலத்த மழை பெய்த நிலையில் பேருந்தின் மேற்கூரையிலிருந்த ஓட்டைகளில் ஆங்காங்கே, மழைநீர் அருவி போல் கொட்டியது. இதனால் பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்து கொண்டே பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டது.
இதை அந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைராகி வருகிறது.