நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், உணவு மற்றும் தண்ணீர் தேடியும், பலா மரங்களில் காய்த்துள்ள பலாப் பழங்களை ருசி பார்க்கவும் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் நுழைவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 11) அதிகாலையில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரை இடித்து தள்ளி கொண்டு, ஒரு ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளது.
திடீரென கேட்ட சத்தத்தால், நடுகூடலூர் பகுதி மக்கள் கண் விழித்து பார்த்துள்ளனர். அப்போது யானை ஒன்று ஆக்ரோஷமாக தடுப்பு சுவரை இடித்துக் கொண்டிருந்துள்ளது. அதனால், அச்சத்தில் மூழ்கிய மக்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில், சத்தம் எழுப்பி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், குடியிருப்பு வாசிகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், யானை உள்ளது என சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சுமார் 20 நிமிடங்கள் அப்பகுதியிலேயே சுற்றித் திரிந்தத யானை அங்கிருந்து சென்றுள்ளது. தற்போது, “தடுப்புச்சுவர் இருந்தும் யானைகள் நுழைவது என்பது கட்டுப்பாடற்ற நிலையைக் காட்டுகிறது. குழந்தைகள் வெளியே விளையாட முடியாது, எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்ற அச்சத்திலேயே இருக்கிறோம். ஆகையால், வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், யானை தடுப்புச்சுவரை இடித்து தள்ளி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.