திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு கோயில் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
மாலையில் சாயரச்சை பூஜையில் கலந்து கொண்டு, ராஜ அலங்காரத்தில் இருந்த தண்டாயுதபாணி சாமியை எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் எடப்பாடி பழனிசாமிக்கு பிரசாதங்கள் வழங்கி சிறப்பு செய்தது. மேலும் பழனிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அதுகுறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.