தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரிகுட்டனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கறவை மாடுகள் அவ்வப்போது மேய்ச்சலுக்காக கிராமத்தில் சுற்றித் திரிவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் 3 கறவை மாடுகள் சாலையில் ஓரமாக நடந்து சென்றன. அப்போது அந்த மாடுகளுக்கு எதிர் திசையில் இரண்டு இளைஞர்கள் அதிகமாக இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது சாலையின் ஓரத்தில் மாடுகள் வருவதைக் கவனிக்காத நிலையில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மாடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரு மாடுக்கு காலில் அடிபட்ட நிலையில் மற்ற 2 மாடுகள் துள்ளிக் குதித்து ஓட்டம் பிடித்தன.
மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த தருமபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (26) மற்றும் ராமன் (38) இருவரும் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அப் பகுதி மக்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.