பெரம்பலூர்: செங்கமலையார் சுவாமி கோயிலில் மழை வேண்டி, ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா மற்றும் கிடா விருந்து நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செங்கமலையார் சுவாமி கோயில் உள்ளது. இந்த ஊரில் உள்ள மக்கள் மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு திருவிழாவானது ஆண்டுதோறும் சிறப்பாக நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் 100 -க்கும் மேற்பட்ட ஆண்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்தனர். மேலும் ஊருக்கு போதுமான அளவு மழை வர வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் ஆகிய வேண்டுதல்களை முன்வைத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
இந்த விழாவில் முதலில் சாமிக்கு பொங்கல் படைக்கப்பட்டது. பின்னர், கிடாக்களை நாட்டார்மங்கலத்தில் உள்ள வடக்கு மலை அடிவாரத்தில் சமைத்து சாமிக்கு படைத்தனர். இதையடுத்து, இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆண்களுக்கும் கிடா விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம மக்கள் ஒருங்கிணைந்து செய்தனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றிணைந்து கோயிலுக்கு வந்து சிறப்பு சாமி தரிசனம் செய்தனர்.