Random Video

அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்; காரணம் என்ன?

2025-06-27 2 Dailymotion

திருப்பத்தூர்: கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படவில்லை என புகார் தெரிவித்து, நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில், கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணியின் போது முன்னதாக இருந்த கழிவுநீர் கால்வாயை உடைத்துள்ளனர். இதில், கால்வாய் உடைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையிலும் தற்போது வரை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து செட்டேரி டேம் செல்லும் சாலையில், சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி போலீசார், ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.