திண்டுக்கல்: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற முருகன் கோயில்களுள் ஒன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இந்த கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 29) ஞாயிறுக்கிழமை வார விடுமுறை என்பதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் படிப்பாதை, யானை பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல மின்இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களிலும் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.